tamilnadu

img

கடைசி வருகையில் காந்திஜி திறந்த புதிய வாசல்கள்

சரியாக 82 ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரி 13 அன்று திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் வாசலைத் திறந்து உள்ளே நுழைகிறபோது காந்திஜியுடன் சேர்ந்து பெருந்திரளான மக்கள் இருந்தனர். அவர்கள் உயர்சாதியினரால் நூற்றாண்டுகளாக தீண்டத்தகாதவர்களாக வைக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட சாதியினர். தெய்வத்தின் புத்திரர்கள் என்ற அர்த்தத்தில் ஹரிஜனங்கள் என்று காந்திஜியால் அழைக்கப்பட்டவர்கள். அந்த மக்களுடன் சேர்ந்து காந்திஜி சென்றபோது பத்மநாபசுவாமி கோவில் வாசல் அன்று அகலத் திறந்தது. ஆலயப்பிரவேச அறிவிப்பு நிஜமானது. தீண்டாமை இருளுக்குள் தேசத்தைத் தள்ளிவிட சங் பரிவார்கள் முயற்சிசெய்கிற இந்தக் காலத்தில் கடைசியாகக் காந்திஜி கேரளத்திற்கு வருகை தந்ததன் நினைவுத் தடத்தில் பயணப்படுவோம்...1937 ஜனவரி 13 அன்று காந்திஜி என்ற அற்புதமனிதரின் முன்பு திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் வாசல் திறந்தது. காந்திஜி தனிமனிதராக வரவில்லை. தீண்டாமையும் தொடாமையும் மூலம் வெளியே நிறுத்தப்பட்ட ஒருகூட்டம் ஆட்களும் அவருடன் இருந்தனர். அவர்களுடன் சேர்ந்து காந்திஜி கோவிலுக்குள் நுழைந்தபோது அதுவொரு சரித்திர நிமிடமாக இருந்தது. பல நூற்றாண்டுகள் நீண்டிருந்த தடை அத்துடன் முறிந்து வீழ்ந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆலயப்பிரவேச உரிமையைப் பெற்றுத்தந்த திருவிதாங்கூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயப் பிரவேச அறிவிப்பு அவ்வாறு நிஜமானது.

நெடிய ஆண்டுகளின் இடைவேளைக்குப் பிறகுகாந்திஜி ஒரு வழிபாட்டு ஆலயத்தில் பிரார்த்தனைப்பூர்வமாக பிரவேசித்தார். அவரின் அந்த ஜனவரி யாத்திரைக்கும் ஆலயவழிபாட்டுக்கும் இன்றுடன் 82 ஆண்டுகள்ஆகின்றன. மதவாத வெறுப்பும் தீண்டாமையுமான விஷம்தோய்ந்த நாட்களை நோக்கிக் கேரளத்தைப் பின்னோக்கிநடத்த முயற்சிக்கிற இக்காலத்தில் சமூக முன்னேற்றத்திற்கான ஆற்றல்மிக்க நினைவூட்டலே காந்திஜி மேற்கொண்ட ஆலயப்பிரவேசம் வழங்கும் செய்தி.1936 நவம்பர் 12 அன்று திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீசித்திரைத் திருநாள் பாலராம வர்மா ஆலயப் பிரவேசஅறிவிப்பு செய்தபோதிலும், அதற்குப் பிறகும்கூடத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னால் ஆலயவாசல் அடைத்தே இருந்தது. காந்திஜியைப் பங்கேற்கச் செய்ய பெரிதாக அறிவிப்பு செய்த பிறகு சட்டத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பு அளவில் கொண்டுவந்தால் போதும் என்று அதிகாரம் படைத்த முக்கியஸ்தர்கள் முடிவுசெய்ததே இதற்குக் காரணம். அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமலாக்குவதை முடிந்தளவு நீட்டிக்கொண்டே போகவேண்டும் என்கிற சதியே இதற்குப் பின்னால் இருந்தது.கேரள மாநிலம் முழுவதும் கவனித்த திருவிதாங்கூரின் இந்த நிர்வாகச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதைக் கைவிட மன்னர் சித்திரைத் திருநாள் முன்வரவில்லை. விழாவில் பங்கேற்க வருகைதருமாறு அழைத்து காந்திஜிக்கு அவர் கடிதம் அனுப்பினார். ஆலயப்பிரவேசம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சாத்தியமாக்க வேண்டும் என்று கோரி சித்திரைத் திருநாளுக்கு காந்திஜி தொடர்ந்துகடிதங்கள் அனுப்பியிருந்தார். மன்னரின் அழைப்பைஏற்றுக்கொண்ட காந்திஜி ஜனவரி மாதம் வருகைதருவதாகப் பதிலும்அளித்தார். 

1937 ஜனவரி 12 அன்று காந்திஜி கன்னியாகுமரி வழியாகத் திருவனந்தபுரத்திற்குச் சென்றார். அன்று மாலை நகரசபையின் சார்பில் பல்கலைக்கழக ஸ்டேடியத்தில் அளித்த வரவேற்புக் கூட்டத்தில் பங்கேற்றார்.தாம் முதன்முதலாக திருவிதாங்கூர் ஆலயத்தில் நுழையப்போவதாக அறிவித்தார். மறுநாள் காலை தாழ்த்தப்பட்ட மக்களுடன் சேர்ந்து ஆலயப்பிரவேசம் செய்தார். அன்று மாலை நடைபெற்ற கூட்டத்திலும் பங்கேற்றுப் பேசினார்.ஆக, காந்திஜி மொத்தம் ஐந்துமுறை கேரளத்திற்கு வருகைதந்திருக்கிறார். காந்திஜியின் வாழ்க்கைப் பயணத்தில் இந்த வருகைகள் அவருக்கு மிக விருப்பமானதாகும். ஸ்ரீநாராயணகுரு, மகான் அய்யன்காளி, மன்னத்து பத்மநாபன் முதலான சமூகச் சீர்திருத்தவாதிகளைச் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது இந்தப் பயணத்தில். 1925 மார்ச் 12 அன்று சிவகிரியில் ஸ்ரீ நாராயண குருவுடன் காந்திஜி நடத்திய பேச்சுவார்த்தை இதில் மிக முக்கியத்துவம் பெறுகிறது. 1937 ஜனவரி 14 அன்று காந்திஜி வெங்கானூரில் அய்யன்காளியைச் சந்தித்தார்.1924-இல்தான் காந்திஜி முதன்முறையாகக் கேரளத்திற்கு வருகைதந்தார். கிலாஃபத் இயக்கப் பிரச்சாரத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 18 அன்று அவ்வாறு கோழிக்கோடுக்கு வருகைதந்தது ஒருநாள்வருகையாகவே இருந்தது. பிறகு வந்த நான்கு வருகைகளும் வரலாற்றில் மிக முக்கிய இடம்பிடித்தவையாகும். 1924-இல் காந்திஜி தமது ஆதரவாளர்களுடன் வைக்கம் சத்யாக்கிரகப் போராட்டத்தைத் துவக்கினார்.

வைக்கம் மகாதேவ கோவிலைச் சுற்றிலும் உள்ள சாலையில் தீண்டப்படாத மக்கள் செல்வதற்கான உரிமையைப் பெறுவதற்காகவே இந்த வைக்கம் சத்யாக்கிரகம். 1925 மார்ச் 12 அன்று வைக்கத்திற்கு வருகைதந்த காந்திஜி கோவிலின் தந்திரியாகிய இண்டம் துருத்தி நம்பூதிரியின் இல்லத்தில் நட்பு முறையில் பேச்சுவார்த்தைக்குச் சென்றதும் காந்திஜியை வீட்டினுள் அனுமதிக்காமல் முற்றத்திலேயே அவரை இருக்கவைத்தது ஒரு அநீதி வரலாறு. காந்திஜி குஜராத்தைச் சேர்ந்த வைஸ்ய பனியா வகுப்பைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காகக் காந்திஜி புறப்பட்டுச் சென்றபிறகு அவர் அமர்ந்திருந்த இடத்தைச் சாணித் தண்ணீர் தெளித்து ‘சுத்தம்’ செய்த அக்கிரமமும் நடந்தது. பிறகு இந்த வீடு காலஓட்டத்தில் கள்ளிறக்கும் தொழிலாளர் சங்க அலுவலமாக மாறியது ஒரு வரலாறு.நடமாடும் சுதந்திரம் என்பது மனித உரிமையாகும் என்ற புரிதல் வருவதற்குத் தாமதமானாலும் அரசு அதிகாரிகளுக்கு அந்தப் புரிதல் உண்டாவதற்கு காந்திஜியின் வருகை ஒரு தூண்டுகோலாக இருந்தது. அன்று வைக்கத்திலிருந்து காந்திஜி நேராகச் சிவகிரிக்குச் சென்றார். அங்கு ஸ்ரீ நாராயணகுருவிடம் அசாதாரணமான தமது ஆத்மார்த்த உறவை வெளிப்படுத்தினார். முதல் சந்திப்பிலேயே தீண்டாமை முதல் அகிம்சை வரையான விஷயங்களைக் குறித்து இருவரும் மிக நீண்டதொரு விவாதம் நடத்தினர்.

ஸ்ரீ நாராயணகுருவின் மரணத்திற்குப் பிறகு 1934 ஜனவரி 20 அன்றும் 1937 ஜனவரி 16 அன்றும் காந்திஜி சிவகிரிக்கு வருகைதந்தார். குருதேவ் குறித்த நினைவுகூட அவர் மனதுக்குப் பெரும் ஊக்கம் தந்தது. தீண்டாமைக்கு எதிராக காந்திஜி மிக வலுவான உரை நிகழ்த்தினார். இது பழமைவாதிகளின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அதேசமயம், ஆலயத்திற்குள் பிரவேசிக்க காந்திஜிக்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டதற்குக் கேரளமும் ஒரு சாட்சியானது. தாழ்த்தப்பட்ட மக்களுடன் சேர்ந்து பத்மநாபசுவாமி ஆலயத்திற்குள் பிரவேசிப்பதற்குச் சற்று முன்பு கன்னியாகுமரியில் காந்திஜியை மிக வேதனைப்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அன்று கன்னியாகுமரி உள்ளிட்ட பிரதேசம் திருவிதாங்கூரின் ஒரு பகுதியாக இருந்தது. ஒருசமயம் கன்னியாகுமரிக் கடலில் குளிப்பதற்கு இறங்கிய காந்திஜி அங்கு திரிவேணி சங்கமத்தில் நீச்சலடித்து மகிழ்ந்தார். அவ்விடத்துக் கடல் அலைகளின் சங்கீதம் எவரையும் தியானத்தில் மூழ்கச்செய்யும் என்று காந்திஜி எழுதியிருக்கிறார். கடலில் குளித்துவிட்டு ஆலய தரிசனத்திற்குச் சென்றபோது அங்கு அதிகாரிகள் அவரைத் தடுத்துவிட்டனர். காரணம்கேட்டபோது, காந்திஜி கடலைக் கடந்து அந்நிய நாட்டுக்குச்சென்றுவந்ததால் அனுமதி வழங்க முடியவில்லை என்று அதிகாரிகள் விசித்திரமான விளக்கம்தந்தனர். பாரிஸ்டர் ஆவதற்காக 1888 செப்டம்பரில் காந்திஜி பம்பாய் துறைமுகத்திலிருந்து கப்பலில் ஏறி கடல்வழி லண்டனுக்குச் சென்றதால் அவரது சொந்த சமூகத்தினரே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை சாதியிலிருந்து ஒதுக்கிவைத்தனர். கன்னியாகுமரியில் தமக்கு ஏற்பட்ட அனுபவம்குறித்து காந்திஜி மிக மனவேதனையுடன் எழுதியிருக்கிறார்.

கன்னியாகுமரியில் உள்ள திரிவேணி சங்கமம்தான் கடைசியில் காந்திஜியின் அஸ்தியை ஏற்றுவாங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆலயப் பிரவேச அனுமதி கிடைத்த பிறகுதான் விவரிக்க இயலாத மகிழ்ச்சியுடன் காந்திஜி 1937-இல் கேரளத்தைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார். காந்திஜிக்கு மிகவும் மகிழ்ச்சியான தினங்களாக அவை இருந்தன என்று கருதலாம். பத்மநாபசுவாமி கோவில் தரிசனத்திற்குப் பிறகு நேராக அவர் கோட்டயத்தில் உள்ள குமாரநல்லூர் தேவி கோவிலுக்குச் சென்றார். காந்திஜி பத்மநாபசுவாமி கோவில் தரிசனம் செய்தது இதற்குள் நாடெங்கும் முக்கிய செய்தியாகப் பரவியது. குமாரநல்லூருக்குச் சென்றகாந்திஜியை வரவேற்க அங்கு பெரும் மக்கள் திரளினர் கூடியிருந்தனர். இருநூறு ஹரிஜனங்களுடன் அவர் ஆலயத்திற்குள் பிரவேசித்தார். அதற்குப் பிறகு தரையில் அமர்ந்தபடி அந்த மக்கள் கூட்டத்தில் பேசினார்.காந்திஜி கேரளத்திலிருந்து புறப்பட்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகு 1948 ஜனவரி 30 அன்று இந்துத்துவ மதவெறியனால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். திருவிதாங்கூர் சட்டம்நிர்ணய சபைக்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில்தான் காந்திஜி கொல்லப்பட்ட செய்தி கிடைத்தது. உடனடியாகத் தேர்தல் வேலைகள் நிறுத்திவைக்கப்பட்டன. பிப்ரவரியில் கேரளத்திற்கு வந்துசேர்ந்த காந்திஜியின் அஸ்திப் பெட்டிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். திருவிதாங்கூர் எல்லையில் அரூரில் வைத்து ஒஃபிஷியேட்டிங் திவான் பி.ஜி.என். உண்ணி தான் அஸ்திப் பெட்டியைப் பெற்று பிப்ரவரி 12 அன்று கன்னியாகுமரிக்கு எடுத்துச் சென்றார். பிஜேடி அரங்கில் பொதுமக்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்ட பின்னர் திரிவேணி சங்கமத்தில் அஸ்தி கரைக்கப்பட்டது.

“இதுபோலொரு மனிதர் இந்தப் பூமியில் எலும்பும் தசையுமாக வாழ்ந்தார் என்று சொன்னால் ஒருவேளை எதிர்காலத் தலைமுறையினர் நம்புவார்களா என்று சொல்ல முடியாது.” -இப்படி ஆச்சரியப்பட்டவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன்.150 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தின் போர்பந்தரில் பிறந்த அத்தகைய மனிதர் நடந்து முடித்த வழிகளிலெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அவரது போராட்டத்தின்-அதற்கான மனவலிமையின் முத்திரைகள் பதிந்துள்ளன.

தேசாபிமானி (13.1.2019) யிலிருந்து  தமிழில்: தி.வரதராசன்